9 வருடங்களில் 75,000 மாணவர்கள் தற்கொலை : கல்லூரிகளில் கவுன்சில் வகுப்பு நடத்த வேண்டும் : தமிழ்நாடு முஸ்லிம் லீக் வேண்டுகோள்.

தமிழ்நாடு முஸ்லிம் லீக்  கட்சியின் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்டுள்ள அறிக்கையில்:


நடந்து கொண்டிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தமிழக எம்.பி ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கடந்த 2007ல் இருந்து 2016 வரை இந்தியாவில் 75,000 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர் என்றும் அதற்கு முக்கிய காரணமாக பள்ளி கல்லூரிகள் மற்றும் பெற்றோர்களின் அதிகப்படியான அழுத்தமும், சாதி மத ரீதியான ஒடுக்கு முறைகளுமே இந்த முடிவுக்கு முக்கிய காரணமென்று மனிதவள மேம்பாட்டுத்துறையே ஒத்துக்கொண்டிருக்கிறது.


 


அதில் 2016 இல் மட்டும்  9,474பேர் தற்கொலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர்.அதாவது நாளொன்றுக்கு 26 மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நாடாக இந்தியா இருக்கிறது. அதிலும் குறிப்பாக மகாராஷ்டிரா (1,350) மேற்கு வங்காளம் (1,147) அடுத்து தமிழ்நாடு (981) மாணவர் தற்கொலையில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.


 


இப்படி ஒரு சூழலை வைத்துக் கொண்டு புதிய கல்விக் கொள்கை என்றும் ஐந்தாம் வகுப்பு எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு என்றும் கொண்டுவருவது மாணவர்களுக்கு மன அழுத்ததை ஏற்படுத்திவிடும். இதன் காரணமாக தான் மாணவர்கள் தவறான முடிவுகளை எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.


 


ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மத பாகுபாடு அடிப்படையில் மதிப்பெண் குறைப்பு காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம், சாதி ரீதியான மாணவர்களிடையே பாகுபாடு ஏற்படுத்தும் செயல்களில் பேராசிரியர்களே ஈடுபடுவது மிகவும் வேதனை அளிக்கிறது. இந்தியாவை வல்லரசாக மாற்றும் ஆற்றல் படைத்த மாணவ செல்வங்கள் தற்கொலை பாதைக்கு செல்வதை தவிர்க்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.


 


மாணவர்களிடையே தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் கல்லூரி, பள்ளிகளில் மாணவர்களுக்கு வாரம் ஒரு முறை கவுன்சிலிங் வகுப்புகளை நடத்த வேண்டும். மாணவர்கள் மட்டுமில்லாது பேராசிரியர், ஆசிரியர்களுக்கு மாணவர்களிடையே பாகுபாடின்றி நடந்து கொள்ள மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அப்படி மாணவர்களிடையே பாகுபாடு காட்டும் ஆசிரியர்கள், பேராசிரியர்கள் மீது கடும் நடவடிக்கைகளையும் அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.